முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்திரைகள் கைவிரல்களைப் பயன்படுத்தியே காட்டப்படுவன. நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள், மற்றும் தெய்வங்களின் சிலைகளையும், திருவுருவப்படங்களையும் கூர்ந்து பார்ப்பவர்கள் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். துவக்கத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த முத்திரைகள் காலம் செல்லச் செல்ல இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத் துவங்கின.
இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்பதாக பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்று பார்ப்போம்.
ஞான முத்திரை
கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும் இணைக்கையில் இந்த முத்திரை கிடைக்கிறது. மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்பட வேண்டும். பெரும்பாலான தியான நிலைகளில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.
நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக்குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.
நன்றி: N.Ganeshan











