அப்பு, ஆச்சி சொன்னாங்க...
பேரன், பேத்தியைப் போல
நல்ல பெயர் எடுக்க வேணுமென்றே!
விடிய, விடிய
விழுந்து, விழுந்து படித்து
பட்டங்கள் பல பெற்றாங்க...
பகையைக் கிட்ட நெருங்காமல்
எட்ட நின்று பழகி
ஒழுக்கம் பேணினாங்க...
எல்லாவற்றையும்
சொல்லி என்ன பயன்?
நீங்களா உணர்ந்தெல்லோ
வாழப் பழகணும் என்றுரைப்பது
அப்பனும் ஆத்தாளும் பாருங்கோ!
விடிய, விடிய இராமாயணம்
விடிஞ்சாப் பிறகு கேளும்
இராமன் சீதைக்கு என்ன முறையாம்
காற்றோடு நேற்று முடிந்த கதையாம்
இன்றைய இளசுகளின் பேச்சிது!
இப்படித் தான் பாரும்
முன்னோரின் பெறுமதி அறியாமலே
இந்நாளில் நம்மாளுகள்
பட்டம் பறக்குமாப் போல
தங்கட பெயரும் பறக்குதாம் என்கிறாங்க...
பெண்ணின் கழுத்தில் கைவைத்து
சங்கிலி அறுத்தவர் சங்கிலிமுருகனாம்...
ஆணின் தோளில் கைபோட்டவள்
ஆண்களை வீழ்த்தும் அலுமேலுவாம்...
பகல் திருட்டுப் பண்ணும் இணையர்
பொன்நிலவனும் வெண்ணிலாவுமாம்...
அட, கெட்ட கேட்டுக்கு
இப்படி இன்னும் அடுக்கினால்
எனக்கும் நொட்டை சொல்லுவியளே!
நல்ல பெயரெடுக்க
நெடுநாள் எடுக்கும் பாருங்கோ...
ஆனால்,
மணித்துளிகளில் கெட்ட பெயர்
வேண்டிச் சுமக்கிறதால தான்
வானில் பறக்கிறாங்கள் போலும்!
என்ன காணும்
பொடி, பெட்டைகளே...
எப்பன் பிடரியைத் தேய்த்து
பின்விளைவை எண்ணிப் பாருங்களேன்...
தமிழ் இலக்கணம் என்றால்
தொல்காப்பியரைக் கூப்பிடுறாங்க...
உலகிலுள்ள அத்தனை அறிவையும்
தேடிப்படிக்கத் தேடுகிறாங்க
திருக்குறள் எழுதிய வள்ளுவரை...
பட்டம் போல பறக்கும்
கெட்ட பெயருக்கு ஏது பெறுமதி?
உற்றாரும் ஊரும் நாடும் உலகும்
உன்னை நாடும் வகையில் - நீ
என்ன தான் நல்லது செய்தாய்?
பட்டம் போல பறக்காது
எட்டுத் திக்காரும்
உன்னை நாட வைப்பது
நீ தேடும் நற்பெயரே!
------------------------------------------------------
இப்பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே. இதனைக் கருத்திற் கொண்டு தங்களைத் தாக்கியதாக எவரும் எண்ண வேண்டாம்.
கருத்துகள்
கோடை காலத்தின் வறட்சி ஒரு
கோடை காலத்தின் வறட்சி ஒரு நாள் மழையில் மாறிவிடும். அதைப் போல நமது முன்னோர்கள் தேடி வைத்த நற்பெயர் நாம் செய்யும் ஒரு சில பயனற்ற செயல்களினால் கெட்டுவிடும். நல்ல பெயர் எடுக்க பல நாள்கள் வேண்டும். ஆனால் கெட்ட பெயர் நம்மை வந்து சேர ஒரே விநாடி போதும். எனவே நல்லதைச் செய்வோம் நற்பெயரை காப்போம். நிலைத்து நிற்கக் கூடியது அதுதான். அருமையான நல்வழிக் கருத்துக்களை கூறிய அன்பர் யாழ்பாவாணனுக்கு வாழ்த்துகள்.
ஐயா பொன்வண்ணன் அவர்கள்
ஐயா பொன்வண்ணன் அவர்கள் கருத்தே என்னுடையதுமாகும்! நல்லதொரு வழிக்காட்டல் அன்பரே!
வணக்கம் நண்பரே,
வணக்கம் நண்பரே,
வரிகள் ஒவ்வொன்றும் யோசிக்க வைக்கின்றது........
" உன்னை நாடும் வகையில் - நீ
என்ன தான் நல்லது செய்தாய்?
பட்டம் போல பறக்காது
எட்டுத் திக்காரும்
உன்னை நாட வைப்பது
நீ தேடும் நற்பெயரே!"
மிக்க நல்லதொரு வழிகாட்டல் நண்பரே........
:clap:






