முன் செய்த வல்வினையால்
முந்தி வந்த விந்துத்துளி..
அடைத்து வைத்த தோல் பைக்குள்
அடங்கிப்போய் சூல் கொள்ள…
வெள்ளை ரத்தம் சிவப்பாகி
நாடி நரம்பு சதை பிடித்து..
அவனவளாய் இனம் பிரிந்து
பிண் டமென உருவெடுத்து..
ஐயிரெண்டு மாதமதில்
அன்னையவள் உந்தித் தள்ள..
நச்சுப் பையும் ஒட்டிப் பிறந்து
அண்டமதில் அலைந்து திரிந்து..
அங்கும் இங்கும் கூத்தாடி
பொய்யை மெய்யாய் தினம் நாடி..
அகமதன் அர்த்தநிலை
ஐயோ ஒன்றும் புரியாது…
சொந்த பந்த காட்டுக்குள்ளே
இன்பத் துன்பக் கூடு கட்டி..
இன்னொரு சதைப் பிண் டம் தேடி
சேர்த்து வைத்த விந்துக் கொட்டி..
மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
பிறப்பெடுத்து பிறப்பெடுத்து…
பிறவியதன் கட்டறுக்க
இருக்கும் வழி காணாது…
சுழல்கின்ற பூமியின்மேல்
சுற்றி சுற்றி வந்து வந்து..
சூட்சுமத்தை உணராது
சுடுகாட்டில் பிணமாகி…
மற்றுமொரு தோல்பைக்குள்
மாற்றமில்லா விந்தாகி……
அப்பப்பா போதுமப்பா
கண்டுகொள்வோம் மூலமதை…
உயிர் கொடுத்து உருட்டியவன்..
உலகமதை திரட்டியவன்..
பிறப்பு எனும் வட்டத்துக்குள்
செக்கு மாடாய் சுழற்றியவன்..
அவனை இனம் காணத் தேடி
நித்தம் தேடி ஓடி ஓடி..
வெளியெங்கும் காணாது
வேறு வழி தெரியாது..
உள்ளுக்குள் உள் நுழைந்து
உற்றவனை கண்டு கொண்டு..
அவனே நானாகி..
நானே அனைத்துமாகி..
ஆதி அந்தம் தெளிந்து
உண்மையதை உணர்ந்து..
அம்மம்மா இறுதியில்
அண்டசராசரம் எங்கும்..
எல்லையற்று கலந்திருக்கும் அது
என ஆனதப்பா முடிவிலே இது !
என் நெஞ்சுக்குள் நீண்ட நாளாய் முட்டிக் கொண்டிருந்த வரிகளை கொட்டி விட்ட திருப்தியோடும்…
சிவராத்திரி… மகா சிவராத்திரிக்கான சிவநிலையோடும்…….
பிரியமுடன்…
பிரியன்…
கருத்துகள்
சிவராத்திரி… மகா
சிவராத்திரி… மகா சிவராத்திரிக்கான சிவநிலையோடும்…….
என் நெஞ்சுக்குள் நீண்ட நாளாய் முட்டிக் கொண்டிருந்த வரிகளை கொட்டி விட்ட திருப்தியோடும்…

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
சிவாய நமவென்று
சிவாய நமவென்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒரு காலும் இல்லை..
இதை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் உண்மையாக நம்புபவர்களுக்குத்தான் இதன் வலிமை தெரியும், புரியும்.
திருமூலரும்:
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே....
என்று அருளியிருக்கின்றார்.
நண்பர் வினோத் அவர்களின் கவிதை மிக ஆழமாகச் சிந்தித்து, அன்பு மனதில் நிறைய, ஆனந்த மேலீட்டினால் உள்ளம் களிப்படைய எழுதியதை நான் உணர்கிறேன். எப்பொழுதும் அவன் நினைவாகவே உள்ளவர்களுக்கும், எல்லாம் அவன் செயல் என்று நம்புபவர்களுக்கும், தன்னையே அவனிடம் ஒப்படைத்து விட்டவர்களுக்கு மட்டும்தான் இப்படி எழுத முடியும். மிக அருமையான இந்த கவிதையை எழுதிய உங்களுக்கு என் உளங் கனிந்த பாராட்டுக்கள்.
அன்பே சிவம் அந்த அன்பை
அன்பே சிவம் அந்த அன்பை ஆராய்ந்து விரிகளை வடித்த உங்களுக்கு பாராட்டுக்கள் 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
ஓம் நமசிவாய என்போருக்கு ஒரு
ஓம் நமசிவாய என்போருக்கு ஒரு துன்பமும் இல்லையே!









