சித்தி தரும் சீலம்தரும் சிவமயமே தரும்
புத்தி தரும் புலமை தரும் புகழனைத்தும் தரும்
தத்திவரும் தவழ்ந்து வரும் தமிழழகைத் தரும்
பக்தி வரும் பிணித்து வரும் பழவினைகள் அறும்
சக்தி தரும் சத்தியமாய் சிறந்த வாழ்வைத் தரும்
பக்தி தரும் பணிவு தரும் பற்றற்ற நிலை தரும்
முக்தி தரும் மேன்மை தரும் முந்தை வினைநீக்கும்
யுக்தி தரும் உண்மை தரும் உன்னதமே தரும்
அழகு தரும் அன்பு தரும் அறிவனைத்தும் தரும்
பழகுதற்கு குழவிபோன்ற இளகு மனம் தரும்
உலக னைத்தும் அளந்து நிற்கும் பேரருளைத் தரும்
எழுதி வைத்த தலை யெழுத்தை மாற்றியமைத்துத் தரும்
அரிய மனம் தானளிக்கும் ஆணவத்தை யழிக்கும்
புரிய வைத்துப் புரியாத புதிரைப் போல புரக்கும்
கரிய நிறக் கொண்டலாக வாரி அன்பை வழங்கும்
உரிய வரம் தந்து நம்மை பரவசத்தில் இருத்தும்
வெற்றி தரும் வெஞ்சினத்தை வேரறுத்து நிற்கும்
வற்றிடாத அன்பைத் தரும் ஆனந்தமே கொடுக்கும்
கற்றிருக்கும் கல்விதனை காலமெல்லாம் பெருக்கும்
எற்றிவரும் காலனையே காத தூரம் விரட்டும்
அன்னை அபிராமி முகம் அத்தனையும் தருமே
அற்புதங்களால் மண்ணில் உயிர்கள் நன்மை உறுமே
அங்குமிங்கும் என்றிலாது எங்கும் நிறைந்த உன்னில்
அனந்த கோடி உயிர்கள் யாவும் ஆனந்தமே பெறுமே
கருத்துகள்
நெஞ்சிற்குள்ளே சிவனை
நெஞ்சிற்குள்ளே சிவனை இருத்தி
நமசிவாய என்றுரைத்தால்
நாளும் நலம் கிட்டுமே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
ஐயா தலைப்பைப் பார்த்ததுமே அது
ஐயா தலைப்பைப் பார்த்ததுமே அது தாங்களாகத் தான் இருக்கும் என்று நினைத்தது பலித்தது!
சிவனேனென்று அன்னை அபிராமியை பார்த்தாலே பாவமெல்லாம் பொடிபட தூள்தூளாகும் என்பதை விளக்கியுள்ளீர்கள்,
இப்பாவில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கின்றது ஐயா! நாளும் தொடர்ந்து இப்பாவை மெருகூட்ட ஒரு சக்தி பிறக்குமோ என்பது எனது தனிப்பட்டக் கருத்து!
ஆன்மிக கவிதைகளை படித்து
ஆன்மிக கவிதைகளை படித்து வெகுநாளான குறை போக்கிவிட்டது தங்கள் கவிதை.
தொடருங்கள்.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...







