தெளிந்தவை மனமும் துலங்கிடுவானும்
தென்றல் தொடுஞ் சுனையும்
கழிந்தது இரவும் கரைந்தவை இருளும்
கனவுதருந் துயிலும்
நெளிந்தது ஆறும் நிமிர்ந்தது மரமும்
நின்றிடும் நிரையழகும்
அழிந்தது பனியும் அகமதில் துயரும்
அலை கடல்மணலதிலும்
வழிந்தது மதுவும் வாசனை மலர்கள்
விரிந்திடும் இதழ்எழிலும்
பொழிந்தது தூறல் போயின முகில்கள்
புரண்டிடும் மலைமடியும்
செழித்தன பெண்கள் சிகையிடை மலர்கள்
செவ்விழி மலர்குவிந்தே
பழித்தன இரவின் பலமழி தோள்கள்
பாங்குடை ஆடவரும்
செழித்திடும் வாழ்வும் சிரித்திடும் இதயம்
சிவந்திடுங் காலைதனில்
வெளித்தன இறைவன் விடியலின்பூசை
விளைவினில் பாவங்களும்
வழித்தெரு நீளம் வண்ணமென் சிறியோர்
வளமெடு குறுநடையும்
விழித்திட, அறிவென் விதையிட செல்வோர்
வீறெடு நடையொலியும்
பழுத்திடும் கனிகள் ருசித்திடும் குருவி
பாய்ந்திடு மணிலதுவும்
கழுத்திடு மணிகள் கலகல ஒலியில்
கதி நடையிடும் எருதும்
இழுத்திடும் வண்டி இரைந்திட மூச்சில்
ஏய் எனும் உறுத்தொலியும்
எழுந்திடுங் காலை இசையொலி தாளம்
இவைதரும் சுகம்பெரிதே
எழில்தரும் வாழ்வில் எழுபவை யாவும்
இயற்கையின் ஒலிநாதம்
களிகொளும் மனதில் கவிதைகள் தோன்றும்
கருவென உருவாகும்
வெளிதனில் நின்றால் விளைந்திடு தென்றல்
வருடிடும் சுகம்காணும்
ஒழிந்தது துயரம் உயர்ந்திட மனமென,
உளமங்கு புதிதாகும்
*********
கவிதையில் காணும் காலை!
குழிந்திடும் கண்கள் குறைந்திடும் பார்வை
கூனிடும் முதுமைதனும்
அழுந்திடு பிணியும் உழன்றிட வலியும்
அதனுடன் சிலராகும்
விழுந்திடும் குரலும் வீம்பத னழிவும்
வெறுமையின் நினைவோடும்
கழிந்திடும் வாழ்வில் கவிதைகள்தானே
காற்றினை உள்நிறுத்தும்
கருத்துகள்
இந்த கட்டுரையில் தமிழ் மழை
இந்த கட்டுரையில் தமிழ் மழை பொழிகிறது

நல்ல எண்ணங்கள்
நல்ல எண்ணங்கள்
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
எழில்தரும் வாழ்வில் எழுபவை
எழில்தரும் வாழ்வில் எழுபவை யாவும்
இயற்கையின் ஒலிநாதம்
அழகா இருக்கு
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
அன்பரே அழகுதமிழில் கவிதை
அன்பரே அழகுதமிழில் கவிதை சொன்னீர்
வளம் குன்றி வயதை தொலைத்தாள் இயற்கை
உம்கவிதை சென்றநாட்களை நினைவுகூற
அது மீண்டும் எம் வாழ்வில் வருமோ
உம்கவிதை வரிகள் போல் இளமை காலை!










