ந கோபிநாத்
எந்தையாம் பெருமானென்று
ஏந்தியோர் மண்ணில் ஒருநாள்
வந்தது எருமை மாடு.
முந்தைய வரலாறுகளை
மடக்கிச் சுருட்டி வல்லாதிக்கக் கோலாக
முறுக்கி நின்றது வாலை.
கால்மிதிப்பில்
சாணியள்ளுபவர்களையும் குளிப்பாட்டுபவர்களையும்
சேனையாகக்கொண்டிருந்தது.
மாட்டுக்கு புல்லும் இளநீரும் தந்தனர் மக்கள்.
போற்றியொரு கலசம் சூடி
பொட்டும் வைத்தபோது
உள்ளத்தின் கள்ள இருளில்
கருத்தது மாட்டின் மூக்கு.
மற்றொரு ஜல்லிக்கட்டில்
மண்டையடிபட்ட மாட்டுக்கு
அண்ணன் கொம்பு முறித்தான்.
குளிக்கவைத்து கும்பமும் வைத்து
தோற்றமைந்த மாட்டுக்கு மரியாதை செய்தான்.
வாலில் பூசிக்கொண்ட புதுவடுவை
மறைக்கமுடியாமலலைந்தது மாடு.
காடுமேடுகளில் மூசித்திரிந்தது அது.
புலியிடமும் ஆட்டிடமும் கொண்ட கோபத்தில்
சிங்கத்திடம் சோடைபோனது.
ஆடுகளை அது மிரட்டிவைத்தது.
எந்தையர் நாடென்று
தாழ்ந்து வணங்கியவனை
மற்றொரு சதியில்
கொல்ல நினைத்தது.
புல்லிட்டவர்களைப்
பூதவுடல்களாக்கியது மாடு.
அவர்களின் குருதியைத்தொட்டு
வாலால் விசிறியடித்து
இரகசியப் பொழுதொன்றில் மறைந்து விட்டது.
அவனில்லாத கணமொன்றுக்காக காத்திருந்து
மீதமுள்ள மூன்று ஆடுகளை
கொல்ல அமர்க்களப்படுகின்றது.
கரும்புள்ளிகள் மெல்லமெல்ல மூடி
கருமையாகிப்போன வாலுடன்
மூசிநிற்கின்றது எருமை மாடு.











