அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
எலியைவிழுங்கி விட்ட
பாம்பினை போல் வலியில்
முனகிக்கொண்டிருந்த
என் அன்னையை கண்டு
என் இதயத்தின் ஓரத்தில்
ஒழுகிய விசும்பல் அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
புலியின் துரத்தலில்
ஓடி ஓடி ஓய்ந்து போன
மானினை போல
எங்களுக்காய் உழைத்து
கால் வலியில் சாய்ந்துகிடந்த
என் தந்தையை கண்டு மனசுக்குள்
கேட்டுக்கொண்ட
வார்த்தைகள் அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
ஊற்றை உள்கொண்டு
கரடுமுரடாய் வெளிப்படும்
என் மனதினை
அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
ஆறுதலாய் பேசவோ
அவர்களை கண்டு அழவோ
அவர்களை கவனிக்கவோ
என் மனதிற்கு
தெரிந்திருக்க வில்லை!
என்றாவது
ஓர் நாள் வெளிப்படலாம்
பாலைவனத்தில்
தடுத்துவைக்கப்பட்ட மழையை போல!



