பருவ காலத்தில் பசங்களுக்கு திடீர்ன்னு உடல் மேல் அவ்ளோ அக்கறை வரும்.முகத்துக்கு கிரீம்,கடலை மாவு அது இது என்று ஏகத்துக்கு பட்டிடிங்கரிங் பணிகள் நடக்கும்.அப்பொழுது உடல்கட்டு மேல் சிலருக்கு ஆர்வம் வரும்.பத்து நாளில் அர்நால்ட் ஆவது எப்படி என்று தங்களுக்குள் டிஸ்கஸ் செய்து கொள்வார்கள்.
அப்படி ஒரு டிஸ்கசன் எங்களுக்குள்ளும் நடந்தது.அதில் காட்டன் கணேஷ் தான் கொஞ்சம் திடகாத்ரமாக இருப்பான் எனவே அவனை தலைவனாக தேர்ந்தெடுத்து கொண்டோம்.தலைவரின் உத்தரவின் படி எல்லாரும் காலையில் கால்கிலோ கொண்டைகடலையை வாயில் போட்டு அரைத்துவிட்டு தெற்கு தெரு பிள்ளையார் கோவிலுக்கு ஆஜர் ஆகிவிட வேண்டும்.அங்கிருந்து எங்கள் ரன்னிங் பயிற்சி துவங்கும்.
இதில் ராபின் அப்பா வெளிநாட்டில் இருப்பதால் அவன் மட்டும் சூ,ட்ரக் பான்ட்,டிஷர்ட் என்று பக்காவாக தயாராகி வந்ததில் எங்களுக்கு கொஞ்சம் வயிதெரிச்சல்.கொஞ்சம் என்றால் இப்படி வந்தால் நாளையிலிருந்து நாங்கள் யாரும் வர மாட்டோம் என்று சொல்லும் அளவிற்குதான்.ஏனென்றால் போகும் வழியில் ஜிகிடிகள் கோலம் போட்டுகொண்டு இருப்பார்கள்.எல்லாம் ஒரு சமூக அக்கறை தான்.ஆனால் அவன் மட்டும் பொறமை புடிச்ச பயலுக என்று திட்டி கூட்டணியில் இருந்து விலகி மூன்று சின்ன பசங்களை சேர்த்துக்கொண்டு தனிக்கட்சி ஆரமித்து விட்டான்.நாங்கள் கவலையே படவில்லை.
முதல் மூன்று நாட்கள் எல்லோரும் ரொம்ப சுறுசுறுப்பாக ஒருத்தரை ஒருத்தர் எழுப்பி விட்டு ஒழுங்காக ரன்னிங் போனோம்.இதில் நான் ரன்னிங் போவதில் எங்க அம்மாவிற்கு தான் ரொம்ப யுஷ்புல்.எந்த வேலையாக இருந்தாலும் ரன்னிங்கை இழுத்து விடுவார்கள்.அப்டி ரன்னிங்க்லையே போய் கால்கிலோ கடலைபருப்பு வாங்கிட்டு வா,ரன்னிங்க்லையே போய் சித்தி வீட்டுல குமுதம் புக் வாங்கிட்டு வா என்று என் ரன்னிங் ஐ முடிந்த வரை பயன்படுதிகொன்டர்கள்.
எங்கள் ஊரில் அயன் மென் ஜிம் என்று ஒன்று துவங்கினார்கள்.அதற்க்கு மாதம் இருபது ரூபாய் கட்டணம்.அப்பாவிடம் கேட்டதற்கு அங்க பெரிய பெரிய கர்லகட்டையை வச்சிட்டு சுத்தறான் நீ கால்ல போடுகுவே வேண்டாம்னு தடை செய்து விட்டார்.அவனவன் நாட்டுகட்டயுடன் சுத்தறான் வெறும் கர்லகட்டாய சுத்தறதுக்கு இவ்ளோ அடக்குமுறையா என்று எனக்கு செம கோவம்.
அம்மா ஏன்டா கட்டைதான் சுத்தனுமா கல்லை சுத்தகூடதா என்று கேட்க விட்டால் பாட்டியுடன் சேர்த்து அரசமரத்தை சுத்த விட்டு விடுவார்களோ என்று பயந்து நானும் கண்ணா எதை சுத்தரோம்னு முக்கியம் இல்ல எப்படி சுத்தரோம்ன்னு தான் முக்கியம்னு தூணிடம் டயலாக் பேசிவிட்டு ஒரு ஆட்டுகல்லை சுத்த ஆரமித்தேன்
.உடற்பயிற்சியில் எலோருக்கும் ஏற்படும் பிரச்சனை என்னவென்றால் ஒரே நாளில் அர்நால்ட் ஆக முயற்சிப்பது தான்.நானும் ஆட்டுகல்லை கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஓவராக சுத்திவிட்டேன்.அன்று வெறும் ஆட்டுகல்லை சுத்தியதற்கு கொஞ்சம் அரிசியும் உளுந்தும் போட்டு சுத்தியிருந்தால் இரண்டு கல்யாணத்துக்கு இட்லி சுட்டிருக்கலாம்
அடுத்தநாள் என் கையை கூட சுத்த முடியவில்லை.பரதநாட்டியம் போல கண்ணை மட்டுமே சுத்த முடிந்தது.இரண்டு நாட்கள் ரோபோ போல் நடமாடினேன்.சொன்னதக் கேக்காம ஆட்டுக் கல்ல சுத்தினா இப்படித் தான் ஆட்டுக் குட்டி மாதிரி பம்ம வேண்டி இருக்கும் என்று காட்டன் கணேஷ்க்கு ஒரே குஷி.
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு திரும்ப ஆட்டுக்கல்லை சுத்தலாம் என்று ஒரு வாரம் ஒத்திவைப்பு தீர்மானம் போட்டு, திரும்ப ஆரம்பித்தது, ஒரேடியா எக்சர்சைஸ் பண்ணிணா உடம்புக்கு ஆகாது என்று ஒரு நாள் விட்டு ஒரு நாளாகி, அப்புறம் வாரம் ஒரு முறையாகி இருவாரத்திற்கு ஒரு முறையாகி கடைசியில் ஆயுத பூஜைக்கு சந்தன குங்குமப் பொட்டு இட்டு பூஜை செய்யுமளவுக்கு உடற்பயிற்சி ரொம்ப அன்யோன்யமாகிப் போனது.
அப்புறம் இங்கே வந்தபிறகு சிக்ஸ் பேக் பார்த்ததும் என் வயிற்றையும் கொஞ்சம் குனிந்து பார்த்தேன் சாதாரண பாமிலி பேக் ஆக இருந்தது கொஞ்சம் கண்டுக்காம விட்டதில் ஜாயின்ட் பாமிலி பேக் ஆக பரிமாண வளர்ச்சி அடைந்திருந்தது.உடனே எனக்குள் இருந்த அர்நால்ட் கனவு முழித்துகொள்ள நேராக போய் ஒரு ஜிம் இல் சேர்ந்து விட்டேன்,
அங்கு இருந்த ட்ரெயினர் நம்ம ஆட்டுகல் கதையை கொஞ்சம் கற்பனை கலந்து சொல்லிவிட்டேன்.அவர் அருண்பாண்டியன் மாதிரி இருந்தார்,பார்ப்பதற்கு மட்டும் இல்ல அவர் பேசினாலும் அருண்பாண்டியன் வசனம் பேசுவதுபோல் காமெடி பண்ணுகிறார இல்ல சீரியஸ் ஆக பேசறார என்று தெரியாது.முதல் நாள் ட்ரெயினர் வேறு,எப்படி நிற்கவேண்டும் உட்காரவேண்டும் என்பதிலிருந்து ஆரம்பித்தார். ரெண்டு மணி நேரம் எல்லாதையும் விளக்கு விளகென்று விளக்கி விட்டு ஏதாவது டவுட்டு இருக்கிறதா என்று கேட்டார். "நாலு பேர் வந்து புழங்குகிற இந்த மிஷினெல்லாம் இப்படி பள பளன்னு வைச்சிருக்கீங்களே..டெய்லி எண்ணை போட்டு துடைப்பீங்களா" என்று நான் கேட்ட டவுட்டு அவருக்கு பிடிக்கவில்லை போலும்.பிழிந்து எடுத்து விட்டார்.முடித்து வெளியே வரும்போது ரிசப்சனில் அவர் எப்போது இருக்க மாட்டார் என்று ஞாபகமாக கேட்டுக்கொண்டு வந்து விட்டேன்.
அப்புறம் அவர் இல்லாத நேரமாக போய் கொஞ்ச நேரம் சைக்கிள் ஓட்டிவிட்டு வருவேன்.சில பல உபகரணங்கள் வாங்கி கையைக் காலை சுத்திப் பார்க்கிறேன், சிக்ஸ் பாக்ஸ் வருகிற வழியக் காணும். நானும் விடுவதாக இல்லை பார்க்கலாம்.
கருத்துகள்
"நாலு பேர் வந்து புழங்குகிற
"நாலு பேர் வந்து புழங்குகிற இந்த மிஷினெல்லாம் இப்படி பள பளன்னு வைச்சிருக்கீங்களே..டெய்லி எண்ணை போட்டு துடைப்பீங்களா" என்று நான் கேட்ட டவுட்டு அவருக்கு பிடிக்கவில்லை போலும்.பிழிந்து எடுத்து விட்டார்.முடித்து வெளியே வரும்போது ரிசப்சனில் அவர் எப்போது இருக்க மாட்டார் என்று ஞாபகமாக கேட்டுக்கொண்டு வந்து விட்டேன்.
super nanbaa
கிஷொர் குமார்












