கேள்வி;நான் காதல் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் ,திருமணம் முடிந்த 40 நாட்களிலேயே என் மனைவியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுவிட்டனர். அவளை கட்டாயப்படுத்தி விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளனர். ‘என் மனைவியை மீட்டுத் தாருங்கள்’ என்று நான் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. என் மனைவியை அவளது பெற்றோரே வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். என் மனைவியை மீட்க நான் என்ன செய்ய வேண்டும்.?
பதில்; வேதா பகத்சிங்-வழக்கறிஞர்.
‘’உங்கள் மனைவி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியதால்,’அவர் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை’ என்று உங்கள் ஆட்கொணர்வு மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கலாம். பொதுவாக, குடும்ப நல நீதிமன்றங்கள் திருமண உறவை பாதுகாப்பதிலேயே மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளும். இருதரப்பிலும் இணைய விருப்பமே இல்லை என்றால்தான்,போதிய காரணங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கும். நீங்கள் நீதிமன்றத்தை அணுகி, குடும்ப ஆலோசகர் அல்லது நீதிபதியின் முன்பு ‘கவுன்சிலிங் வேண்டும்’ என்று கோரிக்கை வையுங்கள். அந்த கவுன்சிலிங்கில் உங்கள் மனைவியை நேரில் சந்தித்து பேசமுடியும். இது சம்பந்தமாக உரிய சட்ட ஆலோசனை பெற்று வழக்கினை எதிர்கொள்ளுங்கள்!’’