கேள்வி; ‘’கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த அடிதடியில் குறிப்பிட்ட சிலர் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்தார்கள். நான் அந்த அடிதடியில் பங்கு பெறவில்லை. ஆனால், அதில ஈடுபட்டவர்களில் இருவர் என் நண்பர்கள். அதைக் காரணமாகவே வைத்தே என் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க என்ன வழி? இந்தப் பொய் வழக்கினால் என் வருங்கால வாழ்க்கை பாதிக்குமா?
பதில்;டி.எஸ்.அன்பு ஐ.பி.எஸ்-காவல் துறை ஆணையர்,சென்னை.
‘’உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் கண்டிப்பாகப் பாதிப்பு இருக்கும்தான். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது ,அரசு வேலை வாய்ப்பின் போது,உங்களைப் பற்றிய விபரங்கள் காவல் துறையினரிடம் கேட்க்கப்படும். ‘இந்தக் குற்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது’ என்று அவர்க்ள தெரிவிக்கலாம். இதனால்,அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது. பாஸ்போர்ட்டும் கொடுக்க மாட்டார்கள். தனியார் துறை என்றால் உங்களுக்கு வேலை வழங்குவது அவர்கள் விறுப்பு வெறுப்புக்கு உட்பட்டது. பொய் வழக்காக இருக்கும் பட்சத்தில் ,சம்பவம் நடந்த நேரத்தில் ‘நான் அங்கு இல்லை’ என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரம், சாட்சியத்தை தயார் செய்து சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் நிரூபிக்கலாம். விசாரணை அதிகாரியை நேரில் சந்திக்கப் பயமாகவோ தயக்கமாகவோ இருந்தால், அவருடைய உயர் அதிகாரிகளைச் சந்தித்து,ஆதாரங்களை கொடுத்து தன்னிலை விளக்கம் அளிக்கலாம். அவர்கள் அதன் மீது விசாரணை செய்து,உங்களை விடுவிக்க வாய்ப்புள்ளது. அல்லது நீதிமன்றத்தில் நீங்கள் குற்றமற்றவர் என்று நீரூபிக்க வேண்டும். குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையும் இருக்காது!’’.