ரஹீம்கஸாலி's படம்

பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் மாறி அல்லது மருவி புது மொழிகளாகி விட்டது. சில பழமொழிகளின் உண்மையான அர்த்தங்களை தொகுத்து கொடுத்துள்ளேன்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு

இதன் அர்த்தம் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணு என்பதல்ல....
ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

களவும் கற்று மற....

இதன் அர்த்தம் களவு, திருட்டு போன்றவைகளை கற்றுவிட்டு பின் மறக்கவேண்டும் என்பதல்ல...மாறாக,
களவு, திருட்டு போன்றவற்றை கற்க மற என்பதாகும். அதாவது களவும் கற்க மற...

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்

இதன் அர்த்தம் ஒருவன் ஏதாவது ஒன்றில் சிக்கி உண்மையை சொல்லாமல் இருந்தால் அவனை அடித்து நொறுக்கினால் உண்மையை சொல்வான் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் இதன் அர்த்தம் அதுவல்ல....
அடி... அதாவது இறைவனின் திருவடி அல்லது காலடி. ஒருவனுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால் அவன் இறைவனின் திருவடியில் சரணடைந்து விட்டால் இறைவனின் உதவி நமக்கு கிடைக்கும். இறைவனின் திருவடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ முடியாது என்பதே இதன் அர்த்தமாகும்.

ஓன்று பட்டால் உண்டு வாழ்வு

இதன் அர்த்தம், நாம் ஒற்றுமையாக இருந்தால் வாழ்க்கை உண்டு என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டாலும் கூட, உண்மையான அர்த்தம் அதுவல்ல...நம் வாழ்க்கையில் துன்பம், பசி பட்டினி, கஷ்டம், நஷ்டம் போன்ற ஏதாவது ஒன்றை பட்டால்தான் வாழ்க்கை கிடைக்கும். எதுவுமே படாவிட்டால் வாழ்க்கை கிடைக்காது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதாகும்.

கல்லை கண்டால் நாயைக் காணாம் , நாயைக் கண்டால் கல்லைக் காணாம்

இதன் அர்த்தம், நாய் வரும்போது கல்லை காணாம், கல்கிடைக்கும் போது நாயை காணாம் என்பதல்ல..
தத்ரூபமாக வடிக்கப்பட்ட ஒரு நாயின் சிற்பத்தை பார்க்கும்போது, அதை நாயாக பார்த்தால் கல் மறைந்து நம் மனக்கண்ணில் நாயாக காட்சிதரும். மாறாக அந்த நாயின் சிற்பத்தை கல்லாக பார்த்தால், என்னதான் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்தாலும் கல்தான் நம் மனக்கண்ணில் தெரியும் என்பதாகும். அதாவது, நாயக்கண்டால் கல்லை காணோம். கல்லைக்கண்டால் நாயை காணோம் என்பதாகும்



அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
இந்த பழமொழியின் அர்த்தம், அரசனன்று கொல்பவன் . அதாவது (அரசன்+அன்று)
கொல்பவன் அரசனன்று(அரசன் அல்ல அல்லது அரசன் இல்லை).
தெய்வமே நின்று கொல்லும்.

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை.
வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே...) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட....

இதன் அர்த்தம், அரசை அதாவது அரசமரத்தை நம்பி புருஷனை கைவிட்ட...என்பதாகும். அரச மரத்தை சுற்றினால் குழந்தை பேறு உண்டாகும் என்பது கிராமத்து வழக்கம்

8.5
Your rating: None Average: 8.5 (4 votes)
http://ragariz.blogspot.com/2010/11/blog-post_14.html