சண்டிகர்: அரியானாவில் 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. உலகிலேயே மிக அதிக வயதில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இன்றைக்கு மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக முடியாததையும் முடித்துக் காட்டுகிறார்கள் டாக்டர்கள். அப்படி, முடியவே முடியாத ஒன்றை அரியானா மாநிலம் ஹிஸ்சார் நகரைச் சேர்ந்த டாக்டர் அனுராக் பிஸ்னாய் சாதித்து காட்டி உள்ளார்.
அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டேரி தேவி(66). கணவர் தேவா சிங். விவசாயி. இவர்களுக்கு திருமணமாகி 44 ஆண்டு ஆகிறது. பட்டேரி தேவிக்கு குழந்தை பிறக்காததால் தேவா சிங் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காததால் சொத்துக்கு வாரிசு வேண்டுமே என்பதற்காக மூன்றாம் தாரமாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்தார். ஆனால்,அவருக்கும் குழந்தை பிறக்கவில்லை.
இதனால், வேதனை அடைந்த தேவா சிங்குக்கு, ஹிஸ்சாரில் வயதான பாட்டிகளை கூட சோதனை குழாய் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஹிஸ்சாரைச் சேர்ந்த டாக்டர் அனுராக் சிகிச்சை அளிப்பது பற்றி தெரியவந்தது. இதனால், மனைவி பட்டேரி தேவியை டாக்டர் அனுராக்கிடம் அழைத்துச் சென்றார் தேவா சிங். சோதனை குழாய் முறையில் பட்டேரி தேவி கருத்தரிக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர் கூறினார். இதற்கான சிகிச்சை கடந்த ஆண்டு தொடங்கியது. முதல் இரண்டு மாதங்களில் 2 கருமுட்டைகளை பட்டேரி தேவியின் கருப்பையில் டாக்டர்கள் வைத்தனர். ஆனால், அதில் ஒரு கருமுட்டை கூட வளரவில்லை. இதனால் மூன்றாவது மாதம் 3 கருமுட்டைகளை கருப்பையில் வைத்தனர். இந்த முறை 3 கருமுட்டைகளும் வளரத் தொடங்கின.
கடந்த மே 29ம் தேதி பட்டேரி தேவிக்கு ஆபரேஷன் மூலம் 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தைகளும் பிறந்தன. 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது உலகச் சாதனையாகும். உலகில் அதிக வயதில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் என்ற பெருமையை பட்டேரி தேவி பெற்றுள்ளார்.
முதல் மனைவி மூலம் சொத்துக்கு வாரிசு கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் தேவா சிங் உள்ளார். இது மருத்துவ சாதனை என்றபோதும், முதிய வயதில் பிள்ளை பெற்ற பட்டேரி தேவி அந்த குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியுமா? குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் முன்பே தாய், தந்தை இறந்துவிட்டால் அவர்களின் கதி என்ன? சொத்துக்கு வாரிசு வேண்டும் என்று முதியவர்கள் ஆசைப்படலாம்? ஆனால், முதியவர்களின் பிறக்கும் குழந்தைகளின் எதிர்க்காலம் பற்றி டாக்டர்கள் கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா? என்ற கேள்விகளை சமூகநல ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்.
நன்றி : தினகரன்