தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும். இதனை தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கம்+ "காய்" = தேங்காய் என அழைக்கப்படுகின்றது. தேங்காயின் புறத்தே பச்சையாக இருப்பினும், பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பது தான் தேங்காய். அந்த தேங்காய்க்குள் தேங்காய்நீர் இருப்பதை ஆட்டிப் பார்த்தால் உணரலாம். அளவாக முற்றிய தேங்காயை நெற்று என்பர். அந்த கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளைநிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்கு பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் மிக இளசாக இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர் என்பர். இது கோடை காலங்களில் வெய்யிலின் வெக்கையைத் தணிக்க அருந்துவர்.
கொப்பரை
கொப்பரையாவதற்காக வெயிலில் உலர்த்தப்படும் தேங்காய்
தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும், அப்படி மிக முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் என்பர். கொப்பரை தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நன்கு உலர்த்தி அதை கொப்பரை ஆக்குவர். கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
சமையல்
தேங்காய் தென்னிந்தியாவில் சமையலில் பெரும்பங்கு வகிக்கிறது. தேங்காயைத் துருவி அதை குழம்பில் மசாலாவுடன் சேர்த்து சமைத்தால் சமையலுக்கு மிகவும் சுவை சேர்க்கும். இதன் பயன்பாடு இந்தியா முழுவதும் மற்றும் மேற்கு நாடுகளிலும் பரவி வருகின்றது.
இளநீர்
தென்னைமரத்தின் இளங்காயில் உள்ள நீரைக் குறிக்கும். எனினும், இளந்தேங்காயையும் குறிக்கும். இளந்தேங்காய் மட்டை உரிக்கும் முன் பச்சை நிறத்தில் காணப்படும். சில வகைத் தென்னைமரங்களில் காவிநிறத்தில் காய்கள் காய்க்கும். அவை செவ்விளநீர் எனப்படுகின்றன. புறமட்டையை உரிக்காமல் மட்டையோடு உள்ள இளந்தேங்காயின் நுனியைச் சீவி உள்ளிருக்கும் நீரை உறிஞ்சிக் குடிப்பர். தேங்காய் முற்றாமல் இளசாய் இருப்பதால் அரிவாள் முதலியவற்றால் சீவ இயலும். நீரைப் பருகியவுடன், இளநீர்த் தேங்காயைப் பிளந்து முற்றாது இருக்கும் இளகிய பருப்பை உண்பர். இந்த முற்றாத இளகிய பருப்புக்கு வழுக்கை என்று பெயர்.
இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இளநீர் நன்கு முற்றி காய்ந்தவுடன் அதிலிருந்து தேங்காய் எடுக்கப்படுகிறது. காய்ந்த இளநீருக்கு நெற்று என்று பெயர்.
இளம் தேங்காயில் உள்ள சுத்தமான நீர் இளநீர். இது சிறிது பால்கலந்த நீர்போன்ற வெண்மை நிறமுடையது. சிறிது துவர்ப்பாயும், தித்திப்பாயும் இருக்கும்.
தூய கலப்படமற்ற சத்துகள் நிறைந்த இளநீர் தாகத்தைத் தீர்க்கும். உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். மருத்துவ குணங்கள் பல கொண்டதால் அழகு சாதனத் தயாரிப்பில் கையாளப்படுகிறது. தோல் நோய்கள் மற்றும் சூரியக்கதிர் பாதிப்பினைப் போக்க மிகவும் உதவி புரிகின்றது.
சித்தர்கள் இரத்த சுத்திக்கு இதைக் கையாண்டனர். ருசியாகவும் தாகத்தைத் தீர்க்கும் தன்மையும் விடங்களகற்றும் தன்மையும், தாதுவைப் பலப்படுத்துதல், தீ சுட்ட புண், நீரிழிவு முதலியவற்றுக்கு உபயோகிக்கலாம்.
அதிகமான உடல் தளர்ச்சி, காலரா, சீதபேதிக்கு இளநீரை ஆதாரமாக வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. செயற்கை குளுக்கோஸ் கிடைக்காத இடங்களில் உடனடி நிவாரணியாக இளநீர் செயல்படுகிறது. அதிகமான பொட்டாசியம் சத்துள்ளது. தையமின், பைரிடாக்ஸின் சிறிதளவு காணப்படுகிறது.
இளநீரை வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து கர்ப்பிணிக்குக் கொடுத்து வரக் குழந்தைகள் நல்ல நிறத்துடன் பிறக்கும். இளநீர் உடலில் உடனே உட்கிரகிக்கப்பட்டுத் தன்மயமாக்கப்படுகிறது.
இளநீர் சிறந்த நிவாரணி. இளநீர் நவீன மருத்துவத்தில் வழக்கில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் எலக்ட்ரோலைட் இவற்றுக்குச் சமமானது எனலாம்.
சிறுநீர்ப் பெருக்கு மருந்துகளுடன் சேர்ந்து உள்ளுக்குக் கொடுக்கலாம். மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தைலங்களிலும், கண் நோய் மருந்துகளிலும் சேர்க்கப்படுகின்றது.
கருத்துகள்
மிகவும் நன்று...
மிகவும் நன்று...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..






