திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.
உடலமைப்பு
திமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக மீன் போல தகவமைத்துக் கொண்டுள்ளன. இவை வெப்ப இரத்த விலங்குகள். தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல்வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் மனிதனைப் போன்றே இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளை பலீன் திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். இசுப்பெர்ம் திமிங்கலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும்.



