இரத்த சோகை நோய்களில் மிகக் கொடுமையானது தலாசீமியா என்னும் நோய். இந்நோய் உள்ள குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கொருமுறை வீதம், ஆயுள் முழுவதுமே இரத்ததானம் தேவைப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய ரத்தசோகை நோய்.
கருவிலுள்ள குழந்தையின் ஹீமோகுளோபின் குழந்தையாகப் பிறந்தவுடனும் மாறாமல் இருப்பதால், உயிர்வாழ புது ரத்தம் தேவைப்படுகிறது. இந்நோய் தாக்கிய 3 -4 வயது குழந்தைகளுக்கு 6 வாரங்களுக்கு ஒரு தடவையாவது ரத்ததானம் கொடுக்க வேண்டும். வளர, வளர அடிக்கடி ரத்தம் தேவைப்படும்.
இதுபோன்ற ரத்தசோகை பீடித்த ஆயிரக்கணக்கானோர் மாற்று ரத்தம் பெற்றே உயிர் வாழ்கின்றனர். விபத்து ஏற்பட்டு இரத்தமிழந்தவர்கட்கு மட்டும்தான் ரத்ததானம் பயன்படுகிறது என எண்ண வேண்டாம். குறிப்பிட்ட காலங்களில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைப் போல, ரத்ததானம் செய்து பல உயிர்களை வாழச் செய்யலாம். மேலும் ரத்ததானம் செய்பவர்களுக்கு இருதய நோய் வருவது குறைவு என்று ஓர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.