'பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால்!' என்கின்றன வேதங்கள். இதில் இருந்தே பாலின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
பாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சில வகைககள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.
தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும்.
அடுத்து பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால் எளிதில் ஜீரணமாகாது. எருமைப் பால் அதிகக் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
ஆட்டுப் பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!
பால் குடித்ததும் புத்துணர்வு தரக் கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மா மருந்தாக உள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
இந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு.ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.
இதில் பிரதானமானது பசும் பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது!
பால், மாட்டின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.
பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகிவிடும். அதன்பின் அப்படியே குடித்தால் செரிக்காது. கூடவே, மார்பில் கோழை சேர்ந்து, சளித் தொந்தரவு வரும். எனவே, அதன்பின் கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது!
காலையில் வெறும் வயிற்றில் பால் சாப்பிடுவது நல்லது. அதன்பின், பசி நன்றாக எடுத்த பிறகுதான் டிபன் சாப்பிட வேண்டும். இருமலோ, தொண்டையில் கிச்...கிச் தொந்தரவோ உள்ளவர்கள், பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடலாம்.
பால் சாப்பிட்ட பிறகு, புளிப்பான பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் இட்லி, புளிப்பான சாம்பார் என டிபன் சாப் பிட்டபிறகு, உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம்.
பாலில் ரெடிமேட் சத்து பவுடர்களைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகமாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு ஊட்டம் தர, இந்தச் சத்துபானங்கள் அவசியம் என நினைக்கிறார்கள் பலர்.
பாலில் இந்த பவுடர்கள் சேர்த்தபிறகு, அதன் கடினத்தன்மை மேலும் அதிகரிப்பதால் அது செரிமானம் ஆகக் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, அதற்கேற்றாற் போல, மற்ற உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். காலை அல்லது இரவு உணவுடன் இந்தப் பானத்தைத் தருவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிகாலை அல்லது மாலை என உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரங்களில்தான் இதுபோன்ற பானங்களைக் குடிக்கத் தர வேண்டும்.
பசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. இப்போது ஹார்மோன் ஊசிகளை எல்லாம் போட்டு, பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், மாடுகள் தற்போது வைக்கோலையும், புல்லையும் மட்டும் சாப்பிடுதில்லை. போஸ்டர்கள், குப்பையில் கிடக்கும் பாலிதீன் கவர்களைத்தான் அதிகமாகச் சாப்பிடுகின்றன. எனவே, அவை ஜீரணமாகாமல் மாட்டின் வயிற்றுக்குள்தான் சிறைபட்டுக் கிடக்கின்றன.
எனவே பாலை நன்கு கொதிக்க வைக்க வேண்டியது மிகவும் அவசியம். பாலை வெறுமனே பொங்கும்வரை கொதிக்க வைத்தால்போதும் என நினைத்து, பொங்கி நுரை கிளம்பி வந்ததுமே அடுப்பில் இருந்து இறக்கிவிடுகிறார்கள்.
இது தவறு. பாலில் அதே அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்து, மீண்டும் பால் அதன் அளவிற்கே வரும் வரையில் கொதிக்க வைக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் தற்போதைய அவசர உலகில் அதற்கெல்லாம் நேரம் ஏது. எனவே பொங்கிய பிறகு ஒரு 10 நிமடமாவது பாலை கொதிக்க வைக்க வேண்டும்.
அதே சமயம் பாலை எந்நேரமும் அடுப்பிலேயே கொதிக்கவைப்பதும் தவறு. டீக்கடைகளில் எப்போதும் அடுப்புச் சூட்டிலேயே இருக்கும் பால் வயிற்றுக்கு ஏகப்பட்ட உபாதைகளை ஏற்படுத்தும்.
மேலும் சில தனியார் பால் நிறுவனங்கள், பாலில் பல்வேறு ரசாயனங்களையும் கலந்து விற்பனை செய்கின்றன. எனவே, நல்ல தரமான பால் நிறுவனங்களின் பொருட்களை மட்டும் வாங்குவது உடலுக்கு நல்லது.
கருத்துகள்
பாலை நிறை உணவு என்று
பாலை நிறை உணவு என்று சொல்லுவாங்க
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
காந்தி ஜி ஆட்டுப்பால் மட்டுமே
காந்தி ஜி ஆட்டுப்பால் மட்டுமே குடிப்பாராம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...






