ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி: பொது மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை, ஆக. 24: தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் பெயரில் ரிசர்வ் வங்கியில் கணக்கு உள்ளதாகக் கூறி வரும் போலி மின்னஞ்சல்கள், கடிதங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பாரத ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் கே.ஆர். ஆனந்தா தெரிவித்தார்.
÷இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
லாட்டரியில் பெரிய தொகை பரிசாக வழங்குவது, வெளிநாட்டில் உள்ள பணத்தை இலவசமாக தருதல், வேலை வாய்ப்பு அளிப்பது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர அனுமதி உள்ளிட்டவை வழங்குவதாகக் கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறி வரும் மோசடி மின்னஞ்சல்கள், கடிதங்கள் அண்மைக்காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான புகார்களும் அதிகரித்து வருகின்றன.
÷இதில் வழக்கமான நடைமுறைகள் மாறி தற்போது ரிசர்வ் வங்கியின் பெயரிலேயே பல்வேறு மோசடி மின்னஞ்சல்கள், கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாகப் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
÷ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ கடித ஏட்டில், உயர் அதிகாரிகளின் பெயர், பதவி, கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தி பொது மக்களை மோசடி செய்வதில் சிலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
÷ரிசர்வ் வங்கியில் எந்த தனிப்பட்ட நபரின் பெயரிலோ, நிறுவனத்தின் பெயரிலோ, அறக்கட்டளை பெயரிலோ கணக்குகள் பராமரிக்கப்படுவது கிடையாது.
÷ரிசர்வ் வங்கியில் உங்கள் பெயரில் ஒரு குறிப்பிட்டத் தொகை வெளிநாட்டில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பெற நீங்கள் இந்த வங்கியில் உள்ள இந்த கணக்கில் இவ்வளவு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறி மின்னஞ்சல்கள், கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
÷இவ்வாறு வரும் அழைப்புகள் எதையும் பொது மக்கள் நம்பி ஏமாற வேண்டாம். ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை விஷயமாக எந்த தனிப்பட்ட நபரையும் தொடர்பு கொள்வது இல்லை.
÷இது தொடர்பாக மோசடியாளர்களை கண்டுபிடிக்க போலீஸôர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவை அனைத்தும் இணையதளம் வாயிலாகவே வருகின்றன என்பதாலும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள ஒருவரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி இந்த மோசடிகள் நடைபெறுவதால் சம்பந்தப்பட்டவர்களை யார் என அடையாளம் காண்பதே பெரும் சிரமமாக உள்ளது.
÷எனவே, இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு வரும் மின்னஞ்சல்கள், கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் அனைத்துக்கும் பொதுமக்கள் பொருட்படுத்தாமல், புறக்கணிப்பதன் மூலமே இந்த மோசடியில் சிக்காமல் இருக்கலாம்.
÷மேலும், பொது மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை வேறு ஒருவர் அவரது தேவைக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அனுமதிப்பவர்களையே மோசடியாளர்கள் துருப்புச்சீட்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
÷தொடர்ந்து இது போன்று அழைப்புகள் வரும் நிலையில் அது சரியானதா என ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் வெளிநாட்டு பண பரிமாற்ற பிரிவு பொது மேலாளரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
÷செப்டம்பர் 8-ம் தேதி கோவையிலும், 9-ம் தேதி கரூரிலும் இந்த மோசடிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது என்றார் கே.ஆர். ஆனந்தா.
--
தினமணி




